தாயை அவதூறாக பேசியதால் இரும்பு ராடால் அடித்து தந்தையை கொன்ற மகன் கைது

பொன்னேரி, ஜன. 22:  தாயை அவதூறாக பேசிய தந்தையை இரும்பு ராடால் அடித்து ெகான்ற   மகனை போலீசார் கைது செய்தனர்.பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி கல்லுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (48). கூலித்தொழிலாளி. இவருக்கு ராணி என்ற மனைவியும் அஜித்குமார், சுதாகர் என 2 மகன்களும் உள்ளனர். அஜித்குமார் பொன்னேரியில் காய்கறி கடை வைத்துள்ளார். மது பழக்கத்துக்கு அடிமையான ரவி, தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழிப்பாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்படும். அப்போது அவதூறாக பேசி மனைவி ராணியை ரவி சரமாரியாக அடித்து உதைப்பாராம். இதனால் விரக்தி அடைந்த ராணி, தனது 2 மகன்களுடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசிக்க தொடங்கினார். இதனால் மேலும் ரவி ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மூத்த மகன் அஜித்குமாரின் கடையில் இருந்து வியாபாரத்தை ராணி கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ரவி, மனைவி ராணியை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதையறிந்து வந்த சுதாகர், ‘’ ஏன் அம்மாவிடம் தகராறு செய்கிறீர்கள். பொது இடத்தில் வைத்து அவதூறாக பேச வேண்டாம். இங்கிருந்து சென்று விடுங்கள் என தந்தை ரவியிடம் கூறியுள்ளார்.

ஆனால், ரவி அங்கிருந்து செல்லாமால் சுதாகரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சுதாகர், கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சரமாரியாக தந்தை ரவியை அடித்ததாக கூறப்படுகிறது.  இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ரவியை அப்பகுதியினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை  பலனின்றி நேற்று அதிகாலை ரவி இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: