அம்பத்தூர், ஜன. 22: தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் குணாளன் (63). பருப்பு வியாபாரி. இவரது நண்பர் புவனேஸ்வரன் (59). துணிக்கடை நடத்தி வருகிறார். இருவரும் கொடுங்கையூர், எம்.ஆர் நகரில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்க குணளான், தனது நண்பர் புவனேஸ்வரனுடன் ஐயப்பன்தாங்கலுக்கு மொபட்டில் சென்றார். குணாளன் மொபட்டை ஓட்ட, புவனேஸ்வரன் பின்னால் அமர்ந்து இருந்தார். பட்டரைவாக்கம் ரயில்வே பாலம் அருகில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் குணாளன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், புவனேஸ்வரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த வாகன ஓட்டிகளும், போக்குவரத்து போலீசாரும் வந்து புவனேஸ்வரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குணாளன் இறந்து ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனை அடுத்து, வாகன ஓட்டிகள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், 30க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் தாம்பரம் புறவழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.