மாமல்லபுரம், ஜன.22: வட மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற பழங்குடியின, ஆதிதிராவிடர் நலக் கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அவர்கள், பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசித்தனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட வட மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற பழங்குடியின, ஆதி திராவிடர் நல கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் நேற்று தனித்தனியாக மாமல்லபுரம் வந்தனர். கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ், ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள், கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் உள்பட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது, அவர்களுக்கு சுற்றுலா வழி காட்டிகள் குமார், லட்சுமணன் உள்ளிட்டோர் பல்லவர் கால சிற்பங்கள் குறித்து தெளிவாக விளக்கினர்.