ஸ்ரீபெரும்புதூர், ஜன.22: ஸ்ரீபெரும்புதூர் அருகே மேல்மதுரமங்கலத்தில் உள்ள தரைப்பாலம் கடந்த மழையின்போது சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். விரைவில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேல்மதுரமங்கலம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கூத்தவாக்கம், தண்டலம், கள்ளிப்பட்டு கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் தொடூர் - கண்ணந்தாங்கல் சாலையை பயன்படுத்துகின்றனர். தொடூர் - கண்ணந்தாங்கல் சாலை மேல்மதுரமங்கலம் பகுதியில் தரைபாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையில், பாலத்தின் இருபுறமும் மழைநீரில் அடித்து செல்லபட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர்.