நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்

தஞ்சை, ஜன. 22: நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தஞ்சையில் முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். தஞ்சையில் உணவுத்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர். மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலெக்டர், விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்ற நெல் கொள்முதல் சம்பந்தமான முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட செயலாளர் கண்ணன் அளித்துள்ள கோரிக்கை மனுவில், “கடந்த காலங்களைவிட நெல் உற்பத்திக்கான செலவு தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால் நெல் கொள்முதல் விலை போதுமான அளவு அதிகரிக்கப்படவில்லை. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசு அண்டை மாநிலங்கள் போல ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,630 வழங்கப்படுவதை போல தமிழகத்திலும் நெல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

தற்போது மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல் தேங்காமல் கொள்முதல் நடைபெற சாக்கு உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் போதுமான அளவு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நடந்தவுடன் தாமதமின்றி நெல்லுக்கான பணம் விவசாயிகளுக்கு கிடைக்க துரித ஏற்பாடு செய்ய வேண்டும். மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் நெல்லில் ஈரப்பதம் கூடுதலாக காணப்படுகிறது. எனவே ஈரப்பதத்தை காரணம் காட்டாது ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். மேலும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்க தேவையான பாதுகாப்பான நெல் கிடங்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: