கும்பகோணம், ஜன. 22: கும்பகோணத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் 2 வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணத்தில் கடந்த 20ம் தேதி அதிகாலையில் சுவாமிமலையை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகம்மது சலிம் மற்றும் திம்மக்குடியை சேர்ந்த மீன் வியாபாரியான சங்கர் ஆகியோரை பைக்கில் குரங்கு குல்லா அணிந்து வந்த கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி பணத்தை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருவரும் தாலுகா மற்றும் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதைதொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் கருணாகரன், குற்ற தடுப்பு பிரிவு எஸ்ஐ கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.இதையடுத்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தாராசுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்த அமுல்தாஸ் மகன் அலெக்ஸ் (22), வளையபேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் முகேஷ் (20), அம்மாபேட்டை குடியான தெரு உலகநாதன் மகன் ஜெகதீஷ் (20), தாராசுரம் மிஷின் தெரு ஆனஸ்ட்ராஜ் மகன் அடால்ட் ஹிட்லர் (19) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும், செல்போன் மற்றும் வழிப்பறி செய்த பணத்தை பறிமுதல் செய்தனர்.