திருச்சி, ஜன.21: திருச்சியில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் பொது மேலாளர் ராஜ்மோகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஜனவரி 20 முதல் 27ம்தேதி வரை ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிலைகளில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நேற்று மகளிர் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பேரணியாக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தலைமை தபால் நிலையம் வழியாக மாநகராட்சி வரை நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி , மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது. ஜனவரி 22ம்தேதி அப்பல்லோ மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. 23ம் தேதி பிஷப்ஹீபர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் முதலுதவி குறித்த பயிற்சி நடைபெறவுள்ளது.