ஈரோடு, ஜன. 20: ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது: தமிழக இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இறுதிநிலையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தகுதி நிலையை கண்டறிய முன் போட்டி தேர்வு வரும் 20ம் தேதி (இன்று) முதல் 22ம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்படும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள். மேலும், மாவட்ட திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறவிருக்கும் மாநில திறன் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பினையும், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பினையும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் உலக அளவிலான திறன் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.