திருவண்ணாமலை, ஜன.20: கள்ளக்குறிச்சி அடுத்த மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நேற்று அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5ம் நாள், திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலையில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மேளதாளம் முழங்க, மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றுக்கு புறப்பட்டார். அப்போது, வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு மண்டகபடி செலுத்தினர்.