பெரம்பலூர்,ஜன20: பெரம்பலூரில் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரிமின்கம்பத்தில் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநரின் மின்னல்வேக நடவடிக்கையால் குடி யிருப்புகளுக்கிடையே ஏற்படவிருந்த மிகப் பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இண்டேன் காஸ் விநியோகம் செய்யும் தனியார் காஸ் ஏஜன்ஸி ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நேற்று காலை திருச்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை குடோனுக்கு செல்ல திருப்பிய போது லாரி மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்து, மின் கம்பிகள் லாரி மீது விழுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பிகளிலிருந்து திடீரென மின்சாரம் பாய்ந்து காஸ் சிலிண்டர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைக்கண்ட லாரி ஓட்டுநர் மின்வாரியத்துக்கு உடனே தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டிக்கச் செய்தார். மேலும் உடனுக்குடன் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதோடு தன்னம்பிக்கையுடன் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் லாரியில் வைத்திருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டு தீயை அணைத்தார்.