பரமக்குடி, ஜன.14: மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைத்து, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. இதனை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக மழைநீரை சேமிக்காமல் வீணாகி வருகிறது. தமிழகத்தில் நிலத்தடிநீரை உயர்த்தும் நோக்கில் கடந்த 2001ல் மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டதால், புதிய கட்டிடங்கள் கட்டும்போது கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கவேண்டிய நிலை உருவானது. ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு வடிகால்கள் அமைத்தவர்கள் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். தனியார் கட்டிடங்கள் மட்டும் இல்லாது அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கவனிப்பாரின்றி கரைந்து போனது. வீட்டு வசதி குடியிருப்புகள், குடிசைமாற்று நலவாரியத்தில் அமைக்கப்பட்ட வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புகள் வீணானது.