ஆர்.எஸ்.மங்கலம், ஜன.14: உப்பூர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மிகவும் முக்கியமான தாகும். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கடலூர் ஊராட்சியில் உள்ள உப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும்் சுற்றுலா பயணிகளும்் வந்து செல்வார்கள். இப்பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வூரில் ஒரு பூங்கா கூட இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஊராட்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்ற நிலையில், இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கோ, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கோ, வயதானவர்கள் மற்றும் பக்தர்கள்,பயணிகள் நடைபயிற்சி மேற்கொள்ள, ஒய்வு எடுப்பதற்கோ ஒரு பூங்கா கூட இங்கு இல்லை. அதனால் இங்கு ஒரு பூங்கா அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.