ஆர்.எஸ்.மங்கலம், ஜன.14: ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரங்களில் வராத பேருந்துகளால் பயணிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இரவில் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் ரீதியாகவும், வேலை வாய்ப்புக்காகவும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரிய மருத்துவமனைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த ஊருக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு மருத்துவ மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம், மதுரை, காரைக்குடி,தேவகோட்டை போன்ற பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. பொதுவாக பகல் நேரங்களில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் ஊருக்குள் உள்ள பேருந்து நிலையத்திற்கு வராமல் பெரும்பாலான பேருந்துகள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பெண்கள்,குழந்தைகள், வயதான முதியவர்கள் இரவு நேரங்களில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு முன்னரே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு சென்று வருகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.