துறையூர், ஜன.13: துறையூர் அருகே நாகநல்லூரில் பூட்டிய வீட்டை திறந்து திருடப்பட்ட 25 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் நேற்று மீட்டனர். துறையூர் அருகே நாகநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தராஜ் மனைவி சுசீலா(53). இவர் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் தாக்குதலால் கடந்த டிச.26ம் தேதி திருச்சி மருத்துவமனைக்கு சென்றார். அதன் பின்னர் ரங்கத்தில் உள்ள தனது மகன் வெங்கடேசின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கடன் தீர்த்தது போக மீதி ரூ.31,40,000 ரொக்க பணமும், 25 பவுன் நகைகளையும் வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் அவருடைய வீட்டுப் பூட்டை சேதப்படுத்தாமல் திறந்து வீட்டுக்குள் இரும்பு அலமாரியில் சுசீலா வைத்திருந்த தங்க நகைகளையும், ரொக்கப்பணம் முழுவதும் திருடு போனது.