கோவை, ஜன.13:குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் முஸ்லிம் ஜமாத்கள் சார்பில் கோவையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமாத்கள் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. கோட்டைமேட்டிலிருந்து பேரணியாக வந்த இஸ்லாமிய பொதுமக்கள் டவுன்ஹால் பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து உக்கடம் ரோடு வரை மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.