தோகைமலை, ஜன. 10: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி டி.எடையபட்டியை சேர்ந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் அய்யர். இவர் கடந்த 6ம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்து உள்ளதாவது: கல்லடை ஊராட்சி கல்லடையில் சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. மழை காலங்களில் இந்த குளித்தில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயனாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த குளத்தின் ஓர பகுதிகளில் வரத்து வாரிகளை அடைத்து சுமார் 60 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் குளத்திற்கு மழைநீர் வருவதை தடுப்பதோடு குளத்தில் போதிய மழைநீர் தேங்காமல் மற்ற விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக கல்லடையில் உள்ள அரசு குளத்தை ஆய்வு செய்து நீர் நிலைகளில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.