குளித்தலை, ஜன. 10: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி- கரூர் இடையே மிகப்பெரிய பழமையான ரயில் நிலையம் குளித்தலையில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து பல நகரங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதுமான அளவில் குளித்தலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. கரூர் மாவட்டத்தில் குளித்தலை ரயில் நிலையம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பாலக்காடு கோட்டத்தில் இருந்து இந்த ரயில் நிலையம் சில ஆண்டுகள் முன்பு சேலம் கோட்டம் கட்டுப்பாட்டில் வந்தது. குளித்தலை வழியாக மயிலாடுதுறை- திருச்சி, கரூர்- ஈரோடு, கோவை- பாலக்காடு, கொச்சி- சென்னை, மங்களூர்- மைசூர் உள்பட சுமார் 15க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருகின்றன. இங்கிருந்து தினந்தோறும் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் சுமார் 1500 பேர், தினசரி பயணச்சீட்டு எடுப்போர் சுமார் 600 பேர், மூன்று மாத பயணச்சீட்டு பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் குளித்தலை ரயில்நிலையத்தில் இருந்து பயணம் செய்து வருகின்றனர்.