கீழக்கரை, ஜன. 10: காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் காவலர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். கீழக்கரை நகரின் குடியிருப்புகளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. கீழக்கரை காவல் நிலையத்தில் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 எஸ்.எஸ்.ஐகள், குறைந்த அளவில் காவலர்கள் என மிக மிக குறைவான போலீசாரே உள்ளனர். மேலும் இங்குள்ள இன்ஸ்பெக்டருக்கு கீழக்கரை காவல்நிலையம் மட்டுமின்றி கூடுதலாக ஒரு காவல்நிலையமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சராசரியாக 663 பேருக்கு ஒரு போலீசார் உள்ளனர். அந்த அடிப்படையில் குறைந்தளவில் கீழக்கரையில் 75 பேர் காவல்துறையில் பணியாற்ற வேண்டும். ஆனால் 1980களில் இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இன்றும் காவல்துறையினர் அதிகப்படுத்தப்படாமல் பணியாற்றுகின்றனர்.