திருவள்ளூரில் மாயமான சிறுவர்கள் மதுரையில் மீட்பு

திருவள்ளூர், ஜன. 10 : திருவள்ளூரில் மாயமான இரண்டு பள்ளி மாணவர்களை, மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டு, திருவள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திருவள்ளூர் வி.எம்.நகர் கோகுலகிருஷ்ணன்(13), அய்யனார் அவெனியூ நவீத் முக்தார்(13) ஆகிய இரு மாணவர்கள், திருவள்ளூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல், சினிமாவிற்கு சென்றுள்ளனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையறிந்த மாணவர்கள் இருவரும் வீடுதிரும்பவில்லை.இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்மில்  சுற்றித்திரிந்த இரு மாணவர்களை, மதுரை ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். அப்போது, நாங்கள் திருவள்ளூரை சேர்ந்தவர்கள் எனவும்,  பள்ளிக்கு செல்லாமல் படம் பார்க்க சென்றது பெற்றோருக்கு தெரிந்து விட்டதால், அவர்களுக்கு பயந்து வீட்டைவிட்டு சென்னையில் இருந்து ரயிலேறி மதுரைக்கு வந்ததாகவும்  கூறியுள்ளனர்.இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  திருவள்ளூர் டவுன் போலீசார் மதுரைக்கு சென்று, இரு மாணவர்களையும் அழைத்துவந்து, அவர்களது பெற்றோர்களிடம் நேற்று இரவு ஒப்படைத்தனர். பெற்றோருக்கு பயந்து திருவள்ளூரில் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி சிறுவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: