கள்ளக்குறிச்சி, ஜன. 10: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்ட பின்னர் நகரத்தில் நாளுக்கு நாள் தொடரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பஸ்நிலையம் எதிரே கச்சேரி சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள் மற்றும் காவல்நிலையம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள கார், டிராவல்ஸ் வேன் ஆகியவை மாற்று இடத்தில் நிறுத்த இடம் தேர்வு செய்யும் விதமாக முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதாவது காவல்நிலையம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள கார், டிராவல்ஸ் வேன் ஆகியவை கோட்டைமேடு பகுதி சாலையின் ஓரமாக காலியான இடத்தில் நிறுத்தவும், கச்சேரி சாலை பகுதியில் உள்ள ஆட்டோக்கள் காவல்நிலையம் பகுதியில் ஏற்கனவே கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தவும் இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தேவஇறக்கம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.