நாகர்கோவில், ஜன.10: இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் ஆசாமிகளை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிடைக்கும் ஆவணங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வாயிலாக இந்தியாவில் அசம்பாவித சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று தகவலும் வெளியாகி இருந்தது. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு, கேரள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் அதன் தொடர்புகள் குமரி மாவட்டத்திற்கும் நீண்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதிகள் 4 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல் உளவு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. கன்னியாகுமரி வழியாக இவர்கள் காரில் தமிழகத்திற்குள் வந்ததாக மத்திய உளவுத்துறையும் தெரிவித்தது. இதன் பேரில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. 4 பேரின் புகைப்படத்தை போலீசார் கடந்த மாதம் 19ம் தேதி வெளியிட்டனர். அவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(25), கோட்டார், இடலாக்குடி, இளங்கடையை சேர்ந்த செய்யது அலி நிவாஸ் (25), பரங்கிபேட்டையை சேர்ந்த அப்துல் சமது, காஜா மொகைதீன் ஆவர். இந்த 4 பேரின் புகைப்படங்களுடன் தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.