மதுரை, ஜன. 9: மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பாஸ் கொண்டு வருவோரை போலீசார் தனி நோட்டில் பதிவு செய்து உள்ளே அனுப்புவது அவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கோயிலுக்கு வந்து சுற்றி பார்த்து விட்டு செல்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று நகரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பாஸ் ஒன்றில் தனது உறவினர்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு பணியில் இருந்த கோயில் உதவி கமிஷனர் ஒருவருக்கும், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலில் முடிந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தனது அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே கோயில் ஊழியர்கள் உள்ளே வரும்போது அடையாள அட்டையுடன் வரவேண்டும் என போலீசார் கடுமையாக உத்தரவிட்டனர். அதேபோல் போலீசார் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பாஸ் இல்லாமல் தரிசனத்திற்கு வந்ததால் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த இரு தரப்பினரிடமும் மோதல் போக்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது.