சாயல்குடி, ஜன. 8: ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் ஊரணி, கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி கிடப்பதால் குளிக்க செல்வோர் சிக்கி பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் பணிகள் நடந்தது. ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் வைகை பரமக்குடி வடிநில கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23.62 கோடியும், மதுரை குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டங்களில் 28 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டது. 11 ஊராட்சி ஒன்றியங்களிலும், யூனியன் பொதுநிதியிலிருந்து பஞ்சாயத்து ஊரணி, கண்மாய் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு, மாவட்டத்தின் பிரதான மழையாக கருதப்படும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. கடந்தாண்டுகளில் தொடர் வறட்சியால் குடிநீருக்கு பரிதவித்த கிராம மக்கள், தற்போது பெய்த மழைக்கு தன்னார்வத்துடன் ஊரணி, கண்மாயிகளில் மழைநீரை சேமித்தனர். இதனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஊரணி, கண்மாய்கள் முழுமையாக நிறைந்து காணப்படுகிறது.