அருமனை, ஜன. 8: 16வது அருமனை பொங்கல் விழா ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடக்கிறது. தெலங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அருமனை வட்டார இந்து சமுதாயமும், ஆலய நிர்வாகங்களும் இணைந்து நடத்தும் 16வது பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் வருகிற 11 மற்றும் 12ம் தேதிகளில் நடக்கிறது. 11ம் தேதி காலையில் கணபதி ஹோமம், பொங்கலிடும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. மாலையில் நடைபெறும் அனைத்து இந்து சமுதாய மாநாட்டிற்கு செல்லன் தலைமை வகிக்கிறார். விழாக்குழு நிர்வாகிகள் மோகன்தாஸ், வித்தியாதரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாஞ்சாலி அம்மா, வள்ளி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். அபிராமி, நந்திதா ஆகியோர் இறைவணக்கம் பாடுகின்றனர். சமய வகுப்பு அமைப்பாளர் பொன்.டென்னிஸ் வரவேற்றுப் பேசுகிறார். புலவர் ரவிந்திரன் தொடங்கி வைத்துப் பேசுகிறார். இந்து சமுதாய பிரமுகர்களான சாந்தப்பன் நாயர், சுரேஷ், செல்வராஜ், வேலப்பன், ஜனார்த்தனன் கொச்சுமணிகாணி, புலவர் ராஜேந்திரன், வாமதேவன் நாயர், கமலன்நாடார், ஐயப்பன்பிள்ளை, பழனி ஆசாத் நடராஜன், சிவகுமார் ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து சுவாமிதோப்பு சிவச்சந்திரன் குழுவினரின் ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. சுனில்குமார் நன்றி கூறுகிறார்.