க.பரமத்தி, ஜன. 7: அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மதுபான வகைகளுக்கு தயாரிப்பு தேதியை குறிப்பிட்ட நிறுவனங்கள் அதன் காலாவதி தேதியை குறிப்பிடாமல் மதுவகைகளை விற்பதாக குடிமகன்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு மதுபான கடைகளில் விஸ்கி, எம்.சி, பிராந்தி வகைகளும், டிரிபிள் எக்ஸ், ஓல்டு மங்க் ரம் வகைகள் பீர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மது வகைகளை 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யும் நிறுவங்களின் பொறுப்பு அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு அதிக கமிஷன் தரும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். அப்போது குறிப்பிட்ட பெரிய தொகை கிடைப்பதாக குடிமகன்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் சரக்குகளில் ஒரு குவார்ட்டரில் ஆல்கஹால் 42.8 சதவீதமும், பீர் வகைகளுக்கு 6 முதல் 8 சதவீதம் என்ற விகிதத்தில் மது வகைகளை தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தரம் இருப்பதில்லையென்று குடிமகன்களிடையே சந்தேகம் நீண்ட நாளாக எழுந்துள்ளது.