சிவகங்கை, ஜன. 7: நாளை(ஜன.8) நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கும் என மாநில பொது செயலாளர் தெரிவித்தார். சிவகங்கையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் திருச்சியில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். அரசு உயர்நிலைமேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் உயர்கல்வி பயின்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, வரக்கூடிய பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்விற்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும்.