சோழவந்தான், ஜன.7: சோழவந்தான் காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் முக்கிய காவல் நிலையங்களில் சோழவந்தான் காவல் நிலையமும் ஒன்று. சோழவந்தான் நகரம் மட்டுமன்றி, சுற்றுப்பகுதியில் முப்பது கிராமங்கள் இக்காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அதிகளவில் உள்ளது. இத்தகைய பகுதிகளை பாதுகாக்கும் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ, தலைமை காவலர், காவலர்கள் என சுமார் 35 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஆண்,பெண் போலீசார் சுமார் பத்து பேர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றவர்கள் அலுவலகப்பணி, நீதிமன்ற வழக்கு பணி, தலைவர்கள் பாதுகாப்பு என பல்வேறு அயல் பணிக்காக வெளியில் உள்ளனர். இங்கு பணியில் உள்ளவர்களும், வழக்கு விசாரணை, வாகன சோதனை, பிரேத பரிசோதனை என வெளியில் சென்று விடுவதால் பல நேரங்களில் காவல் நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருக்கும் நிலை ஏற்படுகிறது.