புதுக்கோட்டை, ஜன.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13இடங்களில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்னண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 97 ஆயிரத்து 226 வாக்காளர்கள், விராலிமலை ஒன்றியத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 455 வாக்காளர்கள், குன்னண்டார்கோவில் ஒன்றியத்தில் 65 ஆயிரத்து 43 வாக்காளர்கள், புதுக்கோட்டை ஒன்றியத்தில் 69 ஆயிரத்து 581 வாக்காளர்கள், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 65 ஆயிரத்து 11 வாக்காளர்கள், கறம்பக்குடி ஒன்றியத்தில் 74 ஆயிரத்து 475 வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 791 வாக்காளர்கள் வாக்களித்தனர். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 80.87 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல அன்னவாசல் ஒன்றியத்தில் 77.99 சதவீதமும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 81.88 சதவீதமும், கறம்பக்குடி ஒன்றியத்தில் 80.51 சதவீதமும், குன்னண்டார்கோவில் ஒன்றியத்தில் 81.46 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. விராலிமலை ஒன்றியத்தில் 81.96 சதவீதமும் பதிவாகியுள்ளது.