பரமக்குடி, டிச.31: மாவட்டத்தில் கிராமப்புற வங்கி ஏடிஎம் மையங்கள் விடுமுறை நாட்களில் செயல்படாமல் முடக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து வங்கி ஏடிஎம் மையங்களின் செயல்பாடுகள் வாரத்தில் பல நாட்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமங்களில் உள்ள ஏடிஎம் மையங்களே அதிகமாக முடக்கப்பட்டு வருகிறது. நெட்வொர்க் பிரச்னை வந்தால் அதை சரி செய்ய பல நாட்கள் எடுத்து கொள்கின்றனர். பணம் இல்லாதது, மெஷினில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை கூட பல நாட்கள் சரி செய்யாமல் இருப்பது என கிராமப்புற ஏடிஎம்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுபோல் வேலை நாளான வெள்ளி கிழமைக்கு பிறகு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மெஷின்களில் பணம் வைக்காமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. விடுமுறை தினங்கள் முடிந்து மீண்டும் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு மேல் தான் மீண்டும் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படும். வாரந்தோறும் சனி, ஞாயிறன்று மையங்கள் பெயரளவிற்கு திறந்திருந்தாலும் பணம் இருப்பதில்லை.