அருமனை, டிச.29: அருமனை அருகே 10 ஆண்டுகளுக்கு முன் கொன்று புதைக்கப்பட்ட ராணுவ வீரர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அருமனை அருகே தேமானூர் ஆற்றுப்பாலத்தின் அடிப்பகுதியில், சுமார் 10 ஆன்டுகளுக்கு முன் 65 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது. அருமனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின், அனாதை சடலம் என கருதி அருமனையை அடுத்த புண்ணியம் பகுதியில் அடக்கம் செய்தனர். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன், கேரளாவில் வினு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாறசாலை ஆரையூர் பகுதியை சேர்ந்த சாஜி, அபிலாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சாஜி தனது தந்தையான முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணனை, தனது நண்பர்கள் அபிலாஷ், வினு ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததும், பின்னர் உடலை அருமனை பகுதி ஆற்றில் வீசியதும் தெரிய வந்தது. மேலும் வினு இந்த விவகாரத்தை போலீசிடம் தெரிவிப்பேன் என்றதால் ஆத்திரமடைந்த சாஜி, அபிலாஷ் உள்பட 4 பேர் சேர்ந்து வினுவை கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.