சாத்தான்குளம், டிச. 24: சாத்தான்குளத்தில் பழக்கடை மற்றும் எலட்ரிக்கல்ஸ் கடைகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது. சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே சிறப்பூரை சேர்ந்த அனீஸ்(45) பழக்கடை நடத்தி வந்தார். இதே போல் தச்சமொழியைச் சேர்ந்த முத்துக்குமார் (36) என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை இருவரும் பூட்டிச்சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பழக்கடை மற்றும் எலக்ட்ரிக் கடையில் தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு பதறிய அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் வீரர்கள் மோகன், கோபால், சீனிவாசன், சுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இச்சம்பவத்தில் அனீஸ் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் பிரிட்ஜ் மற்றும் பழங்கள், பொருட்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலானவை தீயில் எரிந்து நாசமானது. இதேபோல் முத்துக்குமார் கடையில் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.