ஆவடி, டிச.18: தினகரன் செய்தி எதிரொலியாக ஆவடி மாநகராட்சியில் உள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை, தண்டுரை, மிட்டனமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக மாடுகள் செல்வதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் சமீபத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிவந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் மோகன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜாபர், ரவிச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் ஊழியர்களுடன் நேற்று மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.