திருவள்ளூர், டிச. 13: திருவேற்காடு நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை நகர செயலாளர் ரஜினி ஆர்.பாஸ்கர் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்த விழாவையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜையும், 7 மணியளவில் மாதிரவேடு செல்வ விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமமும், காலை 8 மணியளவில் பள்ளி குப்பத்தில் நலிவுற்றவர்களுக்கு போர்வை மற்றும் படுக்கை விரிப்பு வழங்குதலும், காலை 9 மணியளவில் வள்ளிக்கொல்லைமேடு இந்திரபுரி ஈஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்குதல் நடந்தது. காலை 9.30 மணியளவில் மாதிரவேட்டில் மரக்கன்றுகள் நடுதலும், காலை 10 மணியளவில் மன்ற நிர்வாகிகள் 70 பேர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் பதிவு செய்து வழங்குதலும், 70 பேர்களுக்கு ஹெல்மெட் வழங்குதலும், மேத்தா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வலியுறுத்தி மனித சங்கிலியும் நடைபெற்றது.
காலை 11 மணியளவில் கோலடி அரசு உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவும், மதியம் 12 மணியளவில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜையும், அன்னதானமும், அயனம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது.