நாகை, டிச.12: நாகை மாவட்டத்தில் ஆனை கொம்பன் நோய் தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் நேரடி மற்றும் நடவு பணிகளில் சம்பா சாகுபடி நடந்து வருகிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்த மழையினாலும் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நல்லமுறையில் நடந்துள்ளது. இதனால் மகசூல் அதிகரிக்கும் என்ற மகிழ்ச்சியில் நாகை மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நேரத்தில் திடீர் திடீரென மாவட்டத்தில் பெய்த கனமழையால் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நாகை மாவட்டத்தில் திருக்குவளை, ஆதமங்கலம், மாவிலங்கை, தென்மருதூர், கீரங்குடி, கீழகண்ணாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்களில் ஆனை கொம்பன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கிய பயிர்கள் அனைத்தும் கதிர் இல்லாமல் வெறும் தண்டு மட்டுமே காணப்படுகிறது. இதனால் பயிர்களின் மேல் பகுதி மஞ்சள் நிறமாக மாறி சருகுபோல காய்ந்து விடுகிறது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கடனை கூட கட்டமுடியாமல் திகைத்து போய் உள்ளனர். இந்த நோயிலிருந்து சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.