கமுதி, டிச. 11: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான கிராமிய கலைகளை கற்றுத் தருவது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமுதி அருகே காத்தனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் விஜயராம். இவர் இப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடத்துடன், கிராமிய கலைகளான கரகாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளை கற்றுத் தருகிறார் இவரது கலைச்சேவையை பாராட்டி செங்கல்பட்டில் டிஜிட்டல் டீம் சார்பில் ஒளிரும் ஆசிரியர் விருதும், திருநெல்வேலி லயன்ஸ் கிளப் சார்பில் கல்விச் சிந்தனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கலைச்சேவையை இப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்று ஆசிரியரை பாராட்டி வருகின்றனர்.