ஆர்.எஸ்.மங்கலம், டிச. 11: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஆனந்தூரில் இருந்து திருத்தேர்வளை செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட திருத்தேர்வளை கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் திருத்தேர்வளையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காளி கோவிலுக்கு ஏராளமான பக்தர்களும் சென்று வருகின்றனர். இந்த பிரதான சாலை ஆய்ங்குடி மற்றும் கப்பகுடி வழியே திருவாடாணை செல்லும் சாலையுடன் இணைகிறது. இச்சாலை அமைத்து பல வருடங்களாகியும் எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.