பழநியில் பருத்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் சாகுபடி பரப்பு அதிகரித்தது

பழநி, டிச. 11: பழநி பகுதியில் பருத்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் அதன் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இக்கிராமங்கள் இயங்கி வருகின்றன. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. பழநி பகுதியின் கிழக்கு, வடக்கு பகுதிகளில் உள்ள கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, போதுப்பட்டி, தேவத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, காளிபட்டி ஆகிய பகுதிகள் கரிசல் நில பகுதிகளாகும். இப்பகுதிகளில் போதிய நீர் பாசன வசதிகள் இல்லாததால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவாரி நிலமாகவும், கிணற்று பாசனத்தை நம்பியும் இருந்து வருகிறது. இப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் அதிகளவு பயிரிடப்பட்டு வந்தது. இச்சாகுபடியில் படைப்புழு தாக்குதல், மகசூல் குறைவு போன்றவையாலும், போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பருத்திக்கு அதிக விலை கிடைப்பதால் தற்போது அதன் சாகுபடி பரப்பை அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டுக்கு முன்பு வரை 100 ஹெக்டேருக்கு குறைவாக இருந்த பருத்தி சாகுபடி பரப்பு கடந்தாண்டு 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 183 ஹெக்டேருக்கு மேல் தாண்டியுள்ளது.

இதுகுறித்து கணக்கன்பட்டியை சேர்ந்த பருத்தி விவசாயி தங்கமுத்து என்பவர் கூறியதாவது, ஒரு குவிண்டால் ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையான பருத்தி தரத்தை பொறுத்து, தற்போது சுமார் ரூபாய் 3 ஆயிரத்து 700க்கு மேல் விற்பனையாகிறது. இது ஒரு 150 நாள் பயிர். உரமிடுதல், பராமரித்தல் எளிதாக உள்ளது. நீர் தேவை குறைவாக கொண்டது. மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காததாலும், பருத்திக்கு அதிக விலை கிடைப்பதாலும் தற்போது எங்களை போன்ற பெரும்பாலான மானாவாரி விவாசாயிகள் பருத்தி சாகுபடிக்கு மாறி வருகின்றனர். தமிழக அரசு பருத்தி விவசாயத்தை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: