பழநி, டிச. 11: பழநி பகுதியில் பருத்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் அதன் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இக்கிராமங்கள் இயங்கி வருகின்றன. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. பழநி பகுதியின் கிழக்கு, வடக்கு பகுதிகளில் உள்ள கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, போதுப்பட்டி, தேவத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, காளிபட்டி ஆகிய பகுதிகள் கரிசல் நில பகுதிகளாகும். இப்பகுதிகளில் போதிய நீர் பாசன வசதிகள் இல்லாததால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மானாவாரி நிலமாகவும், கிணற்று பாசனத்தை நம்பியும் இருந்து வருகிறது. இப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் அதிகளவு பயிரிடப்பட்டு வந்தது. இச்சாகுபடியில் படைப்புழு தாக்குதல், மகசூல் குறைவு போன்றவையாலும், போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர்.