ஆவடி, டிச. 11: ஆவடி ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாகவே உள்ளது. இங்குள்ள ரயில்வே பிளாட்பாரம், டிக்கெட் கவுன்டர், ரயில்வே கேட், சாலையில் நாய்கள் சுற்றி திரிக்கின்றன. இவை ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பாஸ்ட் புட், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை சாப்பிடுகின்றன. பின்னர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்கள் முன்பு படுத்துக்கொள்கின்றன. இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் அவசரமாக டிக்கெட் எடுக்க வரும் பயணிகள் நாய்களை மிதித்து விடுகிறார்கள். அப்போது அந்த நாய்கள் வெறிகொண்டு பயணிகளை கடித்து விடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் மின்சார ரயிலுக்கு பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளை தூரத்துவதால் பயணிகள் கீழே விழுகின்றனர். ரயில்வே கேட் அருகில் இரவில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. அங்கு இரவில் தண்டவாளத்தை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளை நாய்கள் விட்டு வைப்பதில்லை.