திருத்தணி, டிச. 11: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று நடந்த கார்த்திகை மாத கிருத்திகை விழா மற்றும் மகா தீபத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிப்பட்டனர். திருத்தணி முருகன் மலைக் கோயிலில் நேற்று கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோயில் நுழைவாயில் முன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.