கண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை

திருச்சி, டிச.10: திருச்சியில் வெங்காயகடை, மண்டிகளில் குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி போலீசார் சோதனை நடத்தி வெங்காயத்தை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாடு முழுவதும் வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லமுடியாக வேதனையில் தவித்து வருகின்றனர். இதையடுத்து வெங்காயத்தை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருட்கள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி.பிலிப் எச்சரித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளார்களா என சோதனை செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்படி எஸ்பி ஸ்டாலின் அறிவுரையின்படி டிஎஸ்பி பாரதிதாசன் மேற்பார்வையில் குடிமை பொருட்கள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் சேரன் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் வெங்காய மண்டி மற்றும் பால்பண்ணையில் உள்ள வெங்காய மண்டியில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் காந்திமார்க்கெட் மற்றும் பால்பண்ணை வெங்காய மண்டியில் உள்ள 46 கடைகளில் சோதனை நடத்தினார். இந்த சோதனையில் வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்காமல், வியாபாரத்திற்கு வரும் வெங்காயங்களை உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய இன்ஸ்பெக்டர் சேரன், வெங்காயத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories: