தா.பழூர், டிச. 10: தா.பழூர் அருகே சாலை வசதி கேட்டு 6 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காசாங்கோட்டை கிராமத்தில் கடந்த ஓராண்டாக சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புரந்தான், காசான்கோட்டை, சுத்தமல்லி வழியாக அரியலூர் செல்லக்கூடிய இந்த சாலை அமைப்பதற்கு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஜனவரி 28ம் தேதி வேலை துவங்கப்பட்டுள்ளது. இந்த சாலையை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜனார்த்தனன் என்பவர் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் பெற்று தற்போது வரை எந்த வேலையும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை 9 கிலோ மீட்டர் சாலை என்பதால் அப்பகுதியில் அரியலூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.