புவனகிரி, டிச. 10: கார்த்திகை தீப பெருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் கார்த்திகை தீப பெருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பொருட்கள் விற்பனை சிதம்பரத்தில் களை கட்டியுள்ளது. தீபத்தன்று அகல்விளக்கு பிரதானமாக இருக்கும். இதனால் அகல் விளக்குகள் சிதம்பரத்தில் அதிக அளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் அகல் விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.குறைந்தபட்சமாக ஒரு சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் அதிகபட்சமாக பெரிய அகல் விளக்குகள் ரூ.30 வரை விற்கப்படுகிறது. அழகிய மாடல்களில் பல்வேறு வடிவமைப்புகளில் அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.