ஈரோடு, டிச. 10: பள்ளிகளில் காலை வழிபாட்டு முன்பும், மாலையிலும் மாணவர்களுக்கு உடல் சார்ந்த பயிற்சி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகரம் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி அளவில் மாணவ, மாணவியரின் பாடச்சுமையை குறைத்து அவர்களை உடற்தகுதியுடனும், ஆரோக்கியத்துடன் மன அளவில் தனித்திறனுடம் தயார்படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிறது. உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் அரசு, நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்திற்கு இரு பாட வேளைகள் மட்டுமே உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உடல் சார்ந்த பயிற்சிகளில் குறிப்பாக நடனம், யோகா போன்ற உடல் சார்ந்த பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.