சாயல்குடி, டிச.9: கமுதி அருகே பேரையூரில் இயங்கி வந்த கதர்கிராம பாவாத்து தொழிற்மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வேலையிழந்த தொழிலாளர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கமுதி அருகே பேரையூரில் மத்திய அரசின் உதவியோடு, தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியம் சார்பில் பாவாத்து தொழிற்மையம் இயங்கி வந்தது. தாட்கோ நிதி உதவியோடு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் 4 கட்டிடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு லாபத்துடன் இயங்கி வந்தது. இதில் கதர் வேஷ்டி, துண்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இங்கு பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் காட்டன் நூல்கள் திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் 15 நிரந்தர பணியாளர்களும், 10க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் போதிய பராமரிப்பு இன்றி கடந்த 16 வருடங்களுக்கு முன்பு உற்பத்தி குறைந்து, நலிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த தொழில்மையம் மூடப்பட்டது. இதனால் இதில் வேலை பார்த்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.