திருவாடானை, டிச.4: திருவாடானை அருகே பாரதி நகரில் பழமையான கிணறு ஒன்று பூமிக்குள் திடீரென புதைந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சியை சேர்ந்த பாரதி நகரில் சாரதா 80 என்பவரது ஓட்டு வீட்டிற்கு அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. நேற்று வீட்டின் அருகில் இருந்த அந்த கிணறு திடீரென பூமிக்குள் புதைந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக திருவாடானை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.அதன்பின் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் உடன் வந்து மண்ணுக்குள் புதைந்த கிணற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டி மூடினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பழமையான கிணறு திடீரென மண்ணுக்குள் புதைந்து விட்டது. சுமார் 7 அடி ஆழம் வரை உள்ளே சென்றுவிட்டது. அருகில் வீடுகள் உள்ளன. அந்த வீடுகளும் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக மூடப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றனர்.