மதுராந்தகம், நவ. 28: மதுராந்தகம் அருகே பாலாற்றில் ஈசூர் - வல்லிபுரம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மதுராந்தகம் அருகே உள்ள பாலாறு, பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மழை காலங்களில் 3 மாதங்கள் வரை தண்ணீர் சென்றபடி இருக்கும். இதனால், கரைகளின் இருபுறங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறையாமல் இருந்தது.ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, மழை காலங்களிலும், பாலாறு வறண்டு மணல் பகுதியாக பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. சில இடங்களில் மட்டும், ஓடையில் செல்லும் தண்ணீரை போல சிறிதளவு தண்ணீர் உள்ளது. கோடைக் காலங்களில் ஆங்கங்கே குளம்போல் காணப்பட்டது. கடந்த ஆண்டு நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது.இதனால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. மேலும், ஆற்றின் இரு கரையோரம் வாழும் பல்வேறு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி, தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி திமுக உள்பட பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.