உத்தமபாளையம், நவ.27: உத்தமபாளையம் பேரூராட்சியில் வார்டுகளை பிரித்ததில் ஏற்பட்ட குழப்பத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வார்டுகள் சீரமைப்பு என்ற பெயரில் ஏற்கனவே இருந்த வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். குறிப்பாக உத்தமபாளையம் இந்திராநகர் முன்பு 6வது வார்டாக இருந்தது. இப்போது 12வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதில் யாதவர் தெரு, நாடார் மாரியம்மன் கோவில் தெரு, கல்லறை தெரு என சேர்ந்துள்ளது. 8வது வார்டில் இருந்த கோட்டைமேடு தெருவின் பெரும்பாலான இடங்கள் 11வது வார்டாக்கி, அதனை பழைய கனரா வங்கி மற்றும் அதற்கும் மேல் பிரித்துள்ளனர். முன்பு 1வது வார்டாக இருந்த ஆர்.சி.வடக்கு தெரு இப்போது 6வது வார்டாகி உள்ளது. 10வது வார்டில் இருந்த புதூர் இப்போது 1வது வார்டாக மாறி பெரும் குழப்பமாகி உள்ளது.