பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு

திண்டுக்கல், நவ. 22: பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் நேற்று மாலை குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்தப் பகுதியில் நடந்து சென்றவர்கள் சத்தம் கேட்கும் இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த குழந்தையை பொதுமக்கள் மீட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: