அரியலூர், நவ. 20: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. இந்த வாய்ப்பை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம், ஆட்சிமொழி கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. 26, 27ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடக்கிறது. 27ம் தேதி மாலை 3.30 மணி முதல் ஆட்சிமொழி கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் பயிலரங்க தொடக்க உரையாற்றுகிறார்.