திருவாடானை, நவ.20: திருவாடானை பகுதிகளில் ஊர் பெயர் பலகைகளை மறைத்து சுவரொட்டிகள் ஒட்டப் படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு சாலையின் பிரிவிலும் விலக்கு சாலைகள் உள்ளன. இந்த விலக்கு சாலைகள் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊர் பெயர் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சிலர் திருவிழா திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஊர் பெயர் பலகையில் ஊரின் பெயர் தெரியாமல் மறைத்து போஸ்டர்களை ஒட்டி விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அடையாளம் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.